Monday, June 17, 2013

விசைxநேரம்=தூரம்.

 


புவியீர்ப்பில்லை....எனில் நான்

பறந்திருப்பேன்.....மிதந்திருப்பேன்!

புனிதத்தின் உச்சங்களை

தொடுகையிலே வியந்திருப்பேன்!

கவி....நீர்த்துப்போயிருக்கும்.....

கவலைகளும் கூடவே.....

கனலோச்சும் வெம்மைகளில்

கதறியழ வேண்டாமே....

அவிழாத மருக்கொழுந்தின்

ஆழ் மணத்தை துறந்திருப்பேன்

ஆதார சுருதியற்ற

ஒசையென நிறைந்திருப்பேன்

தவியாமல் தவிக்கின்ற

தாளாண்மை தள்ளியொரு

தனியாளாய் ககனவெளி

திமிரோடு நின்றிருப்பேன்......

வேரூன்றிப் போய்விட்ட

பாட்டியும் முப்பாட்டனதும்

வீரியங்கள் உரமாகி

விகசித்து....நான் பிறந்த

பாருக்குள் கால்பதித்த

பலமென்ற போர்வைக்குள்

பதியங்கள் கொண்டதொரு

பரிணாம வீச்சினுள்ளே

ஊர்கண்டு.....உயிர்கண்டு....

உற்றார் உறவுகண்டு....

உன்னதங்கள் தான்கண்டு....

உயிர்ப்பில் களித்திருக்க.....

யார் கண்டார்...? ஈர்ப்பில்

யாக்கையுமோர் பணயமென

ஆகுமென.....? வேற்றுலகில்

ஆறுமொரு பயணமென?

ஆனந்தப்ரசாத்
  • Nathan Gopal நான் பிறந்த
    பாருக்குள் கால்பதித்த
    பலமென்ற போர்வைக்குள்
    பதியங்கள் கொண்டதொரு
    பரிணாம வீச்சினுள்ளே... கவிதை வீச்சு உள்ளுணர்வை உசுப்புகின்றது.
  • Thiru Thirukkumaran யார் கண்டார்...? ஈர்ப்பில்

    யாக்கையுமோர் பணயமென

    ஆகுமென.....? வேற்றுலகில்


    ஆறுமொரு பயணமென?//
  • Rajaji Rajagopalan ககன வெளிக்குள் ஒரு சுகமான பயணம். கற்பனைப் பயணம். இதனால் எதையெல்லாம் துறக்கவேண்டிவருமோ அவற்றிலும் பார்க்க இனிமையான புதியனவற்றைக் காணவைக்கும் இதமான பயணம். இது ஆனந்தின் பயணம். கூடவே நாமும் பயணிக்கிறோம். அந்த வேற்றுலகில் வாழ ஒரு சில கணங்களாவது வாய்ப்புத் தந்தாரே, அதுவே போதும்!
  • VJ Yogesh கவியீர்ப்பு இல்லையெனில் -நான் எப்போதே கனவு போல்க் கரைந்திருப்பேன்....அற்புதமான கவிதை அண்ணா...!
  • Jeyarany Norbert புவியீர்ப்பில்லை....எனில் நான்

    பறந்திருப்பேன்.....மிதந்திருப்பேன்!
    அவிழாத மருக்கொழுந்தின்
    ...See More
  • Vanitha Solomon Devasigamony ஊர்கண்டு.....உயிர்கண்டு....
    உற்றார் உறவுகண்டு....
    உன்னதங்கள் தான்கண்டு....
    உயிர்ப்பில் களித்திருக்க.....
    யார் கண்டார்...? ஈர்ப்பில்

    யாக்கையுமோர் பணயமென
    ஆகுமென.....? வேற்றுலகில்
    ஆறுமொரு பயணமென?
  • Jegatheesan Subramaniam திமிரோடு....புனிதத்தின் உச்சங்களை தொடுகையிலே!
  • Seelan Ithayachandran 'காலம் - வெளி' கடந்த ஏதோவொன்றின் வாசலில் நின்று அதனை எட்டிப் பார்க்கும் உணர்வினை தருகிறது நண்பா!......அழிந்து போகாமல் இன்னும் இருக்கிறது அந்தத் தேடல்...

No comments:

Post a Comment