Wednesday, October 24, 2012

அத்வைதம்

 



செத்துப்போன எனது கவிதைகளை
சீண்டிப்பார்த்தது என் குட்டிப்பூனை!
திமிர்ந்து கிடந்த ஓர்
காலத்தின் சொற்கள் த்ரவித்துப்போயின
திண்ணிய என் உடல்
நிமிர்ந்து இருந்த நேரங்களெல்லாம்
அவகாசமில்லாதிருந்த நான்
அதிர்ந்துபோனேன்.....
வினாடிமுள் குத்தித்தெறித்த
குருதியழுத்தத்தால்.......
தடவுதலை வேண்டியோ
தண்ணீர் தாகம் தணிக்கவோ
தட்டில் கொறிசாதனங்கள்
தீர்ந்து போன கணங்களிலோ.....
என் கண்களுக்குள் பார்த்து
நேராய்க்கேட்கும்
என் வாழ்வின் இந்த நிமிடம்வரை
ஆயிரமாயிரம் ஜோடிக்கண்களை
பார்த்துவிட்டேன்.....
கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவைகள்
கைவிரல் எண்ணிக்கையில்
உயிரை ஊடறுக்கும்
நேத்திரங்களின் நேர்கோட்டில்
நிதர்சனங்கள் துலக்கமானது
கள்ளத்தின் கலப்பில்லாதது
பாஷைகள் பலியாகிய
பவித்ரமான வேளையது
தூங்குவதும் எழுவதும்
தூங்காமல் தூங்குவதும்...
அவ்வளவில் ஆனதே அமைதி.
ஆனந்தப்ரசாத்.




  • Thiru Thirukkumaran தூங்குவதும் எழுவதும்
    தூங்காமல் தூங்குவதும்...
    அவ்வளவில் ஆனதே அமைதி.//

  • George Singarajah உங்கள் கவிதையை காத்திருந்து படித்தாலும் அது பாயசம் போல இனிக்கிறது ...நன்றி நண்பரே .

  • Solomon Vanitha Devasigamony சகோதரர் ஆனந்தப்ரசாத், நீங்கள் எழுதும்
    அருமையான கவிதை வரிகளை
    படிக்கும் வாய்ப்பு, அண்மையிலிருந்து
    எனக்கும் கிடைத்துள்ளது .
    மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!

    அத்வைதம் அருமை!அருமை!!

    கண்களுக்குள் உடுருவிப் பார்த்தவைகள்
    கைவிரல் எண்ணிக்கையில்
    உயிரை ஊடறுக்கும்
    நேத்திரங்களின் நேர் கோட்டில்
    நிதர்சனங்கள் துலக்கமானது
    கள்ளத்தின் கலப்பில்லாதது...

  • Vj Yogesh "நேத்திரங்களின் நேர்கோட்டில்

    நிதர்சனங்கள் துலக்கமானது

    கள்ளத்தின் கலப்பில்லாதது


    பாஷைகள் பலியாகிய

    பவித்ரமான வேளையது"

  • Rajaji Rajagopalan ----------------------------
    என் வாழ்வின் இந்த நிமிடம்வரை
    ஆயிரமாயிரம் ஜோடிக்கண்களை
    பார்த்துவிட்டேன்.....

    கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவைகள்

    கைவிரல் எண்ணிக்கையில்
    உயிரை ஊடறுக்கும்
    நேத்திரங்களின் நேர்கோட்டில்
    நிதர்சனங்கள் துலக்கமானது

    கள்ளத்தின் கலப்பில்லாதது

    பாஷைகள் பலியாகிய
    பவித்ரமான வேளையது

    தூங்குவதும் எழுவதும்
    தூங்காமல் தூங்குவதும்...

    அவ்வளவில் ஆனதே அமைதி.
    .......................
    ஆத்மாதான் இங்கே குட்டிப் பூனையானதோ,
    கிடைத்தையெல்லாம் கிழித்துக் கிழித்துத் தேடியபின்
    கிடைத்தது கள்ளக் கலப்பில்லாத அமைதி!

    .................

    கவிஞர் தன்னையும் வருத்தி வாசிக்கும் என்னையும் வருத்தினார்.

  • Arasan Elayathamby தூங்குவதும் எழுவதும்,தூங்காமல் தூங்குவதும்...அவ்வளவில் ஆனதே
    வாழ்க்கை ! "த்ரவித்துப்போயின". " நேத்திரங்களின்" என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்புறம் இந்த கவிதையின் சில வரிகளை என்னோட சுவரில வெட்டி ஓட்டலாமுன்களா?

  • Anand Prasad Arasan Elayathamby ''த்ரவித்துப்போதல்'' என்றசொல் அழுகி நீர்த்துப்போன....
    அல்லது உழுத்துப்போன...ஆனால் காய்ந்துபோனதல்ல. Undergo
    decomposition, deteriorate or to rot.
    ''நேத்திரங்கள்'' ......கண்கள்.....நயனங்கள்.!!!
    தாரளமாக....ஆனால் சொல்லவந்த கருத்தை சொதப்பாமல்.
    நன்றி நண்பரே....என் வரிகள் பிடித்துப்போய் விட்டதென நினைக்கிறேன்....மகிழ்ச்சியே.

துரும்பு

 

 


கரித்துண்டுக்கும்
கற்சுவருக்கும் உள்ள
சம்பந்தம்
காகிதத்திற்குள்
குறுகிப்போனதை
விச்வரூபமெடுக்க வைத்தது
மனசுக்குள்
மறுகிக்கொண்டிருந்ததை
பிரமாண்டமாக்கியது
கண்ணீரை
பளிங்காக்கியது.
பல்குத்துவதற்கு
மட்டுமல்ல.......
இரும்புகளை
இளக்கவும் கூட....!
ஆனந்தப்ரசாத்




  • Vj Yogesh "பல்குத்துவதற்கு

    மட்டுமல்ல.......

    இரும்புகளை
    ...See More

  • Rajaji Rajagopalan ஒரு சிறு துரும்பு எங்களுக்குப் பல்குத்துவதற்கும் பயன்படும், ஆனால் அது

    விச்வரூபமெடுக்க வைக்கும்
    பிரமாண்டமாக்கும்
    பளிங்காக்கும்

    இரும்புகளை இளகவைக்கும்

    ஆகவே எதையும் சிறு துரும்பு என ஒதுக்காதீர்கள்.

    ஒரு நல்ல கவிதைக்கு கன்னியர்கள் மட்டும்தான் கருவாகவேண்டுமென்பதில்லை. துரும்புகூட..

    நன்றி, ஆனந்தம் தரும் பிரசாத்



Thursday, October 18, 2012

முதுமை..... (அல்லது வாழ்வின்மீதான இரண்டாவது காதல்!)

 


இந்த நாட்களில்
மழை
என்மீது நிர்பந்திக்கப்பட்டது
அழகுதான்.....
உலகப்பரப்பின்
அவலங்களுக்காய்
உணர்ச்சிவசப்பட்டு....
ப்ரபஞ்சம் உதிர்ந்து கழிக்கின்றது
பருவநிலை மாற்றங்கள்
பால்யத்திற்கு சரி......
தண்மை அடர்ந்த
ஒரு தருணத்தில்.....
சற்றும் எதிர்பாராமல்....
வாழ்வை முத்தமிட்டேன்...
அவள் உதடுகளில்
ஆத்மாவை
உறிஞ்சித் தீர்க்கும் அளவுக்காய்!
ஆழ்மனத்தே....
சரக்கு ரயில் சக்கரங்கள்
தண்டவாளம் அதிர...
படு வேகமாக...
அவளோ....
எதிர்க்கவுமில்லை.....பின்
நிராகரிக்கவுமில்லை
மழையோ
தேர்ந்த இசையின்
ஸ்வரப்ரஸ்தாரங்களாய்
நாலாபுறமும் வீசியடிக்கிறது
தண்ணுமைக் கலைஞனின்
லய வின்யாசங்களாய்
இடியுடன் கூடவே.....
கறுத்துக் கிடந்த மேகங்கள்
கச்சேரி முடிந்ததும்
வெளுத்தே வெளுத்தன
மெதுவாக அவளிடம் கேட்டேன்
''என்மீதான உனது அங்கீகரிப்பை.....
நான் துஷ்பிரயோகித்தேனா?
வயதை மீறிய என் செயல்
உன் இளமையின்
உயிரைப் பறித்ததா?
ஆம்...என்னில்
என்னை மன்னித்துவிடு''
அவள் முறுவலித்தாள்.....
பின்......
''நீயொன்றும் உடற்சூட்டின்
அங்கஹீனங்களால்
இயங்கவில்லை
உனக்கானதே உன் வாழ்வு''
சமாதானமானேன்!
மனமோ.....
நீர்த்த பஞ்சுப்பொதியாய்
மீண்டும் மேகமானது!
ஆனந்தப்ரசாத்.

 
  • Narayana Moorthy முதுமை.... நான் எழுதியிருக்க வேண்டுமே இதை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது... மழை - நீர் - கவிஞர்.
  • George Singarajah அருமையான அழகான கவிதை ...ONLY POET CAN EXPRESS IN THIS WAY ...WONDERFUL WAY.
  • Thiru Thirukkumaran அவள் முறுவலித்தாள் மனமோ.....
    நீர்த்த பஞ்சுப்பொதியாய்
    மீண்டும் மேகமானது!//
  • Gowry Sivapalan அழகான வரிகள் ஒரு காட்சியை கண்முன்னே நிறு த்தியது. மழையின் ஓசை காதினுள் கேட்கிறது . வாழ்த்துகள்
  • Rajaji Rajagopalan ---
    மனம், சரக்கு ரயில் சக்கரங்கள் தண்டவாளம் அதிர ஓடுவதுபோல் அதிர்ந்தாலும் முதுமை வாழ்வை முத்தமிடும்போது அதன் ஆத்மாவை உறிஞ்சித் தீர்க்கும் அளவுக்கு ஆக்ரோஷமாய் இருந்தது. வெறும் முத்தமா அது?

    ...........
    தேர்ந்த இசையின்

    ஸ்வரப்ரஸ்தாரங்களாய்
    நாலாபுறமும் வீசியடிக்கிறது
    தண்ணுமைக் கலைஞனின்
    லய வின்யாசங்களாய்
    இடியுடன் கூடவே....

    முதுமைக்கே உரிய பொறுமையும் ஆதங்கமும் மற்றவர்கள் மீதான மதிப்பும்,

    ''என்மீதான உனது அங்கீகரிப்பை
    நான் துஷ்பிரயோகித்தேனா?
    வயதை மீறிய என் செயல்
    உன் இளமையின்
    உயிரைப் பறித்ததா?
    ஆம்...எனில்
    என்னை மன்னித்துவிடு''
    எனச் சொல்கிறது
    ஆனால் வாழ்க்கையின் பதிலோ,
    'நீயொன்றும் உடற்சூட்டின்
    அங்கஹீனங்களால்
    இயங்கவில்லை
    உனக்கானதே உன் வாழ்வு''

    இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்? முதுமையில்தான் வாழ்வின்மீது உண்மையான காதல் உண்டாகிறது.

    கைதேர்ந்த கலைஞன் கையினால் உருவாகிறது விக்கிரகம்; வணங்காமலிருக்கு முடியுமா?
  • Anand Prasad முதுமையில்தான் வாழ்வின்மீது உண்மையான காதல் உண்டாகிறது.
    Thank you Rajaji Rajagopalan!!!
  • Rajaji Rajagopalan நாமெல்லோருமே ஒவ்வொரு விநாடியும் முதுமையை நோக்கி ஊர்ந்துகொண்டிருக்கிறோம். சிலர் விரைவாக, சிலர் நிதானமாக. வேகம் எப்படியிருப்பினும் வாழ்வின் மீது கொள்ளும் காதல் வயது ஏற ஏற இன்னும் கூடிய அர்த்தமுள்ளதாகிறது. இதனையே நீங்கள் கவிச்சுவையொடு சொல்லப் புறப்பட்டீர்கள். ஒரு மனிதன் தன் வாழ்வின்மீது எத்தனைமுறை காதல் கொள்கிறான் என்பதை அவனே கூறமுடியாது. ஆனால் அவன் வாழ்வின் இறுதிக் காலத்தில்தான் அதன்மீதான உண்மையான காதலை முழுமையாக உணர்கிறான். அதுவே வாழ்க்கையின் மீதான இறுதிக் காதல். என் இறுதி நாட்களில் அக்காதல் அனுபவம் எப்படி இருந்தது என ஒரு வரியாவது எழுதி வைக்கவேண்டுமென விரும்புகிறேன். நன்றி, Anand Prasad.
  • Vj Yogesh //'நீயொன்றும் உடற்சூட்டின்

    அங்கஹீனங்களால்

    இயங்கவில்லை


    உனக்கானதே உன் வாழ்வு''//
  • Solomon Vanitha Devasigamony தண்மை அடர்ந்த
    ஒரு தருணத்தில்.....
    சற்றும் எதிர்பாராமல்....
    வாழ்வை முத்தமிட்டேன்...