Wednesday, March 6, 2013

கூனல் எனது பிறப்புரிமை

 



யாருக்கோ எப்போதோ

எடுத்துரைத்த ஞாபகம்....

என்னுடைய முதுகில்

ஏற்பட்ட கூனலை நிமிர்த்துவது பற்றி....

யாரென்று நினைவில்லை

எத்தனையோ பேருக்கு

எப்படியெல்லாம் சொன்னேன்?

அத்தனை முகங்களும்

அடியோடு மறந்து போய்...

கூனல் மட்டும்

அப்படியே இருக்கிறது!

நிமிர வழி தெரிந்தும்

பயமாக இருக்கிறது

யார் யாரோ வைத்தியர்கள்

பச்சிலையும் மூலிகையும்

இன்னும் இருக்கின்ற

உலகத்துக் குழைகளெல்லாம்

அடியடியென்று அடித்தும்

அசையவில்லை கூனல்

பரியாரி தந்த பதமான எண்ணைமுதல்

அரபுநாட்டில் உள்ள

அதியுயர்ந்த எண்ணை வரை...

போட்டு உருவியும்....

போகவில்லை...என்றாலும்

கூனல் நிமிரக் கூடிய வழிகளெல்லாம்

நான்றிவேன் நன்கு

நாலுபேருக்கெடுத்துரைப்பேன்

ஆனாலும் எனக்கு

பயமாக இருக்கிறது

நானாக நிமிர்வதெல்லாம்

நடக்காது ஜென்மத்தில்....

பரியாரி விடமாட்டான்

எனக்கு கூனல்

இருக்கின்ற வரைக்கும்தான்

தனக்கு பிழைப்பென்பான்

தடியொன்றும் வைத்துள்ளான்.....

பெருந்தன்மையோடு நான்

கூனிக்கொண்டிருக்கிறேன்.

ஆனந்தபிரசாத்.
 
  • Narayana Moorthy கனடாவில் 'நிமிர்ந்து' 'நிற்கும்' 'கவிஞரும்' நீர்தான் ஐயா...!!!
  • VJ Yogesh //பரியாரி விடமாட்டான்

    எனக்கு கூனல்

    இருக்கின்ற வரைக்கும்தான்


    தனக்கு பிழைப்பென்பான்//
  • Vathiri C Raveendran கூனல்......
    அரசியல் ஊனங்களையும்
    பேசுகிறது.
  • Power Ful Brain //நானாக நிமிர்வதெல்லாம்

    நடக்காது ஜென்மத்தில்....

    பரியாரி விடமாட்டான்


    எனக்கு கூனல்

    இருக்கின்ற வரைக்கும்தான்

    தனக்கு பிழைப்பென்பான்// இது பல அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்.

    கூனல் = மக்கள்.
    பரியாரி = அரசியல்வாதிகள்.
  • Arasan Elayathamby ஒரு வயதானவர் குனிந்து கூனலாக கம்புஉண்டி நடந்து போனபோது ஒரு இளஞ்சன் என்ன தாத்தா குனிந்து தேடுறிங்க எண்டு பரிகாசமாய் கேட்டதுக்கு அவர் "இழந்துவிட்ட இளமையைத் தேடுகின்றேன் "எண்டு சொன்னாராம்!
  • Thiru Thirukkumaran பெருந்தன்மையோடு நான்
    கூனிக்கொண்டிருக்கிறேன்.//
  • Pena Manoharan கூனலும் நிமிர்வென்று கூறும் கவிதை.அருமை.வாழ்த்துக்கள் ஆனந்த் பிரசாத்.
  • Vanitha Solomon Devasigamony கூனல் நிமிரக் கூடிய வழிகளெல்லாம்
    நானறிவேன் நன்கு
    நாலுபேருக்கெடுத்துரைப்பேன்
    ஆனாலும் எனக்கு
    பயமாக இருக்கிறது

    நானாக நிமிர்வதெல்லாம்
    நடக்காது ஜென்மத்தில்...
  • Kiruba Pillai வாவ் ...தமிழ் பெருமை கூனலா ????அருமை கவிதை ஆனந்த பிரசாத் ..என்னே கருத்து ..அருமை ..

No comments:

Post a Comment