Wednesday, December 26, 2012

***மரணநாள் தெரிந்தால்....!!!

 


அழைப்பிதழ் அனுப்புவேன்
சொந்தம் பந்தங்களுக்கு
சொல்லியனுப்ப மாட்டேன்
நண்பர்களுக்கு மட்டும்.....
நண்பர்களிலும்.....நல்ல
நண்பர்களுக்கு மட்டுமே.
பொறுக்கி எடுத்த பொறுக்கிகளுக்கே.
தினசரி மாலையில்
'மெத்ரோ' முகப்பில்
வயலின் வாசிக்கும்
மானசீக குருவுக்கு....
நிச்சயமாய் அழைப்பு.
சில்லறை இல்லாதேனும்
சிரித்துக்கொண்டே இசைப்பான்.
சாவுக்கு முதல் நாள்
ஒரு சிறு 'பார்ட்டி'
செளக்கியமாயிருந்தால்....
சந்தனக்கட்டை
சரிப்பட்டு வராவிட்டால்
'சைக்கிள் டயர்'
ஏனெனில் நானொரு
இந்து!?!?
இயக்கத்தைப் பொறுத்து
குருவிகள் உட்காரக்கூடியகம்பம்......
அல்லதுகுஞ்சுமீன் விளையாடும்
கடலின் ஒரு பகுதி
மூன்று நாட்கள் தாங்கக்கூடிய
முகச்சவரம் செய்துகொள்வேன்
வேஷ்டி சட்டை.....
வாசனைக்குப் பன்னீர்...
அடுத்த 'ட்ரான்ஸிற்'
எதுவென்று தெரியாதே?
சாப்பாடு?......வேண்டாம்
எனக்காக ஒரு இடியப்பம்
இந்தப் பிரபஞ்சத்தில்
இல்லாதே போய்விடுமா?
நானாகவே போய்
பெட்டிக்குள் தூங்கும்
நாள் மட்டும் தெரிந்தால்.......
கடன்களை
கடன்பட்டாவது
அடைத்துவிடுவேன்
எனது தலையெழுத்தை
வாசிக்க முடிந்திருந்தால்
தலைப்புச்செய்திகளை
தூக்கியெறிந்திருப்பேனே?
எனக்கு யாரும்
மரண தண்டனை
விதித்திருக்க மாட்டார்கள்.
***இருபத்தியொரு வருடங்களின்முன்புஎழுதியது....
இன்னமும்உலகும் அழியவில்லை.....
கூடவே நானும்தான்!

  • VJ Yogesh //எனது தலையெழுத்தை

    வாசிக்க முடிந்திருந்தால்

    தலைப்புச்செய்திகளை


    தூக்கியெறிந்திருப்பேனே// உலகத்தை உற்று உணர்பவன் தான் கவிஞன்... அருமை அண்ணா!
  • Rajaji Rajagopalan -----------0------------

    மெத்ரோ' முகப்பில்
    வயலின் வாசிக்கும்
    மானசீக குருவுக்கு....//


    செளக்கியமாயிருந்தால்....
    சந்தணக்கட்டை
    சரிப்பட்டு வராவிட்டால்
    'சைக்கிள் டயர்'...//

    எனக்காக ஒரு இடியப்பம்
    இந்தப் பிரபஞ்சத்தில்
    இல்லாதே போய்விடுமா?...//

    மிக அற்புதமான வரிகள். மாண்புடன் வாழவிரும்புபவர்கள் மதிக்கவேண்டிய மனித உணர்வுகள்.
  • Aangarai Bairavi Maranaththilum kambeerathai paarungappa! Santhanam 2 suzhi anna!
  • Anand Prasad Aangarai Bairaviதிருத்திவிட்டேன் தம்பி...... நன்றி என் எழுத்துப்பிழையை
    எடுத்தியம்பியதற்கு. ஒரு சிறு விண்ணப்பம்......
    ஏன் நீங்கள் தமிழில் கருத்துப்பகிரவிரும்புவதில்லை?
  • Power Ful Brain எதற்கும் இன்னொரு நாள் தானே? காத்திருந்து தான் பார்ப்போமே?
  • Aangarai Bairavi Anna! Enakkum aasaidhaan.tamizhil ezhudha! Indhap payapulla phone la. Illaiye naan en seivean.
  • Pena Manoharan சைக்கிள் டயர்,குருவிகள் உட்காரக்கூடிய கம்பம் நல்ல குறியீடுகள்.மூன்று நாட்கள் தாங்கக்கூடிய முகச்சவரம்,எனக்காக ஒரு இடியப்பம் நல்ல தொன்மங்கள்.அருமை.அற்புதம்.’எரிதலும் உயிர்த்தலுமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது மனித ஜீவிதம்’என்று என்னுடைய குறுங்கவிதையொன்று முடிவுறும்.அதை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்.
  • Thiru Thirukkumaran இன்னமும்உலகும் அழியவில்லை.....கூடவே நானும்தான்..//
  • Arasan Elayathamby மரணநாள் தெரிந்தால்........வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் ஏனோ தானோ எண்டு இருக்கும்!
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "இன்னமும்உலகும் அழியவில்லை.....கூடவே நானும்தான்!" இணைகிறேன்.
  • Vanitha Devasigamony 'மெத்ரோ' முகப்பில்
    வயலின் வாசிக்கும்
    மானசீக குருவுக்கு....
    நிச்சயமாய் அழைப்பு.
    சில்லறை இல்லாதேனும்
    சிரித்துக்கொண்டே இசைப்பான்.
  • Thayaparan Nallaiah · Friends with Kannathasan Krishnamoorthy
    மாயா கலண்டர்.......மாயா கலண்டர் எண்டு கத்தினவை எல்லாம்.இனி "மாயா மாயா எல்லாம் மாயா " எண்டு பாடட்டும் ..........அவையள் இப்பிடி சொல்லுவினமா " அது போன கிழமை , இது இந்தக்கிழமை " ? .
  • Thayaparan Nallaiah · Friends with Kannathasan Krishnamoorthy
    தற்போது நம்மால் பயன்படுத்தப்படும் எல்லாமுமே கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை......<, விஞ்ஞானம் , தத்துவம் , முதலியன> அவர்களே..உலகுக்கு இவை வழங்கிய கிரேக்கர்களே அமைதியாக இருக்கும்போது மற்றவர்கள் எதற்காக கூச்சல் இடுகிறார்கள் , உலகம் அழிகின்றது , சூரியன் ,இருள்கின்றது சந்திரன் எரிகின்றது என்று ?

உலக கவிதை இயக்கங்கள்....(2)

 



    "உன்னை அவர்கள் கொன்றார்கள்
    உன்உடலைப் புதைத்த இடத்தைக் கூறவில்லை
    இந்த நாடே
    உனது தினைவுச் சின்னமாதலால்
    நிகராகுவாவில்
    நீ புதைக்கப்படாத ஒவ்வொரு அங்குலத்திலும்
    நீ பிறந்துவிட்டாய்'சுடு'
    என்ற ஆணையால்அவர்கள்
    உன்னைக் கொன்றதாக நினைத்தார்கள்
    அவர்கள் செய்ததெல்லாம்
    ஒரு விதையைப் புதைத்தது தான்''
    அடுத்து மற்றுமொரு கவிதை
    உணர்வு பூர்வமாக நிறவெறியின் குரூரத்தை சித்தரிக்கிறது.
    டென்னிஸ் ப்ரூட்டஸ்ஆங்கிலத்தில் எழுதும் தென்னாபிரிக்க கவிஞர்.
    1956ல் போர்ட் எலிஸபெத்தில்பெரிய வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஊர்வலத்தில்
    பொலிசாரால் சுடப்பட்ட ஜான் நான்கோசா ஜிபே என்கிற கறுப்பு இனத்தவருக்கு சமர்ப்பணமாக
    'ஒரு இறந்த ஆப்பிரிக்கனுக்காக....' ( For a dead african) என்ற தலைப்பில்
    இவர் எழுதிய கவிதை.
    ''நமக்கு வீரர்களோ போர்களோ இல்லை
    வீசியடிக்கும் வெறுப்பு மழையின் கீழ் மலரும்
    பல்வேறுபட்ட காயங்களால்
    இறந்து போகும்ஒரு குமட்டும் அரசின்
    பலியாட்கள் மட்டுமே.
    சலிப்பூட்டும் குறிப்புடன் சரித்திரம் பதிவு செய்ய
    யுத்தங்களோ சண்டைகளோ நமக்கு இல்லை
    கண்களற்ற இரவுகளில் கொல்லப்படும் கைதிகளும்
    இருளில் நிகழும் தற்செயலான சாவுகளும் மட்டுமே
    ஆயினும் நம் நாட்டின் விடுதலைக்காய்
    மடிந்தவர் பட்டியல் கேட்கப்படும்
    போதுவியப்பு ஏதுமின்றி
    இறுதிப் பரிசை அடைந்த வீரர்களின் அருகில்
    பெயரற்ற ஆயுதமற்ற இவர்கள்.''
    அபத்தங்களின் க்ளைமாக்ஸில் புரட்சி வெடிக்கிறது.
    யுத்தங்களின்காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம்.
    ஆயினும் அனைத்திலும் அடிநாதம் ஒன்றே.
    அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது என்பதில் ஆரம்பிக்கிறது.
    உலகின் பல பாகங்களிலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
    மக்களிடமிருந்து முனகல்களாக வெளிவந்து கொண்டிருக்கும்கவிதைகளை
    புரிந்து கொள்வதன் மூலமாகவாவது ஒரு நிம்மதியை
    தற்காலிகமாகவேனும் நாம் தேடிக்கொள்ள இக்கவிதை இயக்கங்கள் உதவுகின்றன.
    இதனாலேயே இவை பரந்த அளவில் மொழிபெயர்க்கவும் படுகின்றன.
    தென்னாபிரிக்க கவிஞர் டென்னிஸ் ப்ரூட்டஸ் எழுதிய
    இன்னொரு கவிதை
    'குருதி ஆற்றின் நாள்' (Blood river day) என்ற தலைப்பில்.
    ''ஒவ்வொரு வருடமும் இதே நாளில்
    அவர்கள் தங்களுடைய பூட்ஸ்களால்
    தரையைத் தாளம் தட்டுகிறார்கள்
    மந்திரங்களை உறுமுகிறார்கள்
    குருதியின் வாசனையை எழுப்ப
    அதற்கான காற்றை வெறியுடன்
    மோப்பமிடுகிறார்கள்
    குற்றம்அவர்களை விரட்டுகிறது
    கரடு முரடான கொடியமறைவிடம் நோக்கி.....
    ஆனால் அந்தி வேளையில்
    என்னிடம் வருவது
    எங்கும் நிரம்பிய தூசியின் மணம்
    சுடு மணலில் மழை
    ஜல்லடைத் துளிகளிடும் போது
    மண்ணின் நல்ல மணம்
    தூசியின் அந்த நல்ல மணம்
    பூமியெங்கும்ஒரே மாதிரித்தான் இருக்கிறது"
    அடுத்து அடோனியஸ் என்ற புனைப்பெயரில்
    பாரீஸில் வசித்துவரும் அரேபியக்கவிஞர் அலி அஹ்மத் ஸையத்
    எழுதியதொருகவிதை யுத்தத்தின் அச்சத்தால் ஆயிரக்கணக்கில்
    நமது மண்ணைவிட்டு புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களின்
    அவலநிலையைகண்ணீரோடு கண்முன்னே கொண்டு வருகிறது.
    தலைமறைவு (Underground)
    ''எம் விழி இமைகளின்
    இடையில்கடந்து சென்றன நகரங்களின் இருப்பு
    எம் முகங்களின்முரண் முகங்களின்
    பின்னேநாங்கள் கூக்குரலிட்டோம்
    காணாமல் போய்விட்டவர்களைப்போல்
    ஒவ்வொரு நகரத்தின்
    அடிநிலைக் கல்லறைகளுக்கு
    உள்ளும் நாங்கள் வாழ்கிறோம்
    ஓடுகளுக்குள் பதுங்கியிருக்கும்
    நத்தைகள் எனநிராகரித்து நிற்கும்
    நகரங்களே!
    வாருங்கள்எம்மைக் கண்டு கொள்ளுங்கள்.''
    அபத்தங்களுக்கெல்லாம் அழகான நியாயம் கற்பித்துக்கொண்டுஇருக்கும் வரை
    சிறுபான்மையாகட்டும், ஒடுக்கப்படுவோர்ஆகட்டும் படு குஷியாகத்தான் இருப்பார்கள்.
    தாங்கள் அசடுகள்ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணரத்துவங்கியதும்
    ஆத்திரம்அடைகிறார்கள். ஆயுதப்போராட்டம் வரை போய்விடுகிறார்கள்.
    புரட்சி வெடிக்கிறது. போர்....போர்....போர்....
    இந்த ஆத்திரத்தைமுதலில் வெளியே கக்குபவர்கள் கவிஞர்களே.
    Songs are our weapons.....கவிதைகளே எங்கள் கனல் கக்கும் ஆயுங்கள் என்றுஉறுமியபடி
    பேனையைத் தூக்கிக்கொண்டு பாய்பவர்களும்இவர்களே.
    இந்த கோபத்தை தாக்கமேற்படும் விதத்தில் வெளிப்-படுத்திய கவிஞர்கள்
    உலகின் பல்லவேறு பாகங்களிலுமுள்ளபாதிக்கப்பட் மக்களால் இனம் காணப்பட்டார்கள்.
    மொழிபெயர்க்கப்பட்டார்கள். சிறுமை கண்டு சீறியவைகள் பூமியெங்கணும் பொதுமைப்படுத்தப்பட்டது.
    ஈற்றில் சிவரமணியின் வரிகளோடு.........
    ''தோழர்களே
    விலங்குகளுக்கெல்லாம்
    விலங்கொன்றைச் செய்தபின்
    நாங்கள் பெறுவோம்
    விடுதலை ஒன்றை''
    ஆனந்தபிரசாத்.




  • Arasan Elayathamby சிவரமணியின் ஒரு அருமையான கவிதைய சில வருடங்கள் முன் என்னோட சுவரில் பதிந்து இருந்தன்! பலருக்கு அது விளங்கவில்லை என்றார்கள்.சிவராமணி எதற்காக, எழுதிய எல்லா கவிதைகளையும் நெருபில போட்டு கொளுத்திப்போட்டு தற்கொலை செய்தார்கள் எண்டு ஒருவருக்குமே தெரியாது !

  • Pena Manoharan எம்.ஏ.நுஹ்மான் மொழிபெயர்ப்பில் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பிற்காகப் பதிப்பாளர் எம்.பௌஸர் பதிவினையே என் பதிலாகப் பகிர விரும்புகிறேன்.”போராடுவதற்கான நியாயங்கள் பூமிப்பந்தின் சகல திசைகளிலும் இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றன.அதுவரை போராட்டங்கள் வெடிப்பதையும் அது முன்னெடுத்துச் செல்லப்படுவதையும் எந்த ஆதிக்க சக்திகளாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இதை மெய்ப்பிக்கும் மண்ணும் மனிதர்களும்தான் பலஸ்தீனமும் பலஸ்தீன மக்களும்.....”ஈற்றில் சிவரமணியின் வரிகள் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.வாழ்த்துக்களும் நன்றிகளும் ஆனந்த்பிரசாத்.

  • Arasan Elayathamby சிவரமணியின் மரணநிகழ்வில் ரமணியின் நண்பர்கள் சேர்ந்து ஒரு கவிதை வாசித்தார்கள்,அந்த கவிதை முழுவதும் நினைவுஇல்லை ,கடைசி வரி இப்படி முடியும் " பிரியமமான நண்பியே எல்லாம் முடிய முன்னர் முற்றுபுள்ளிய ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் " நான் அந்த மரணவிடில கலந்துகொண்டு இந்த வரிகளை இன்னும் மறக்காமல் சுமந்துகொண்டு இருகிறன் ,ஒரு நல்ல கவிதை, கதை எப்பவுமே நினைவில இருக்கும் எண்டு சுஜாதா எழுதிஇருக்கிறார்!

  • Aangarai Bairavi Veppam tharum kavithai.por vetkaiyei thoondum kavithai.

  • VJ Yogesh நல்லதொரு பதிவு அண்ணா..!

உலக கவிதை இயக்கங்கள்.

 


''பெரியதோட்டத்திலே

ஒரேயொரு பூ தான் பூத்திருக்கிறது!

ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகள்

அந்த ஒரு பூவைக் கண்டு கொள்கின்றன.

தேடிக்காண்பதே கவிதை.....

தேடாமல் காண இயலாது.''

பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம் அவர்கள்

'தேடிக்காண்பது' என்ற தலைப்பில் எழுதிய கவிதை இது.
எவ்வளவு உண்மை?
1930 களில் கம்யூனிஸ்டுகளிடையே வழக்கிலிருந்த new verse என்கிற பதத்தை
புதுக்கவிதை என்று மொழிபெயர்த்ததோடு அறுபதுகளில் புதுக்கவிதை இயக்கத்தில்
தீவிரமான பங்கெடுத்துக்கொண்டவர் இவர்.
இவரதுகவிதைத்தொகுதியொன்றின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
''சங்கீதத்தின் மொழி பிரபஞ்சம் முழுவதுக்கும் உரியது என்கிறார்கள்.
இது காரணமாகத்தானோ என்னவோ
மொழிகளால் எல்லை வகுக்கப்பட்ட கவிதை
சங்கீதத்துடன் சேரும்போது
பிரபஞ்ச பாஷையாக மாறிவிடுகிறது
என்று ஒரு மரபு நம்மிடையே ஏற்பட்டிருக்கிறது.
இதனை நான் ஏனிங்கே குறிப்பிடுகிறேனென்றால்
தப்பித்தவறி யாராவது சந்தத்தோடு மரபுக் கவிதை எழுதினால்
அது கவிதை இலக்கியத்தில் பரிசோதனைமுயற்சியென்பதாக
விமர்சிக்கும் அளவுக்கு ஞானசிகாமணிகள்
நம்மிடையே பெருகிவரும் இந்நேரத்தில் நல்ல
கவிதையைப்பற்றிய பிரக்ஞை தேவை என்பதற்காகவே.
"கவிதை'' என்கின்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையொன்றை பார்ப்போம்.
''கவிதை வேண்டுமானால்
சொற்களைக் கூராக்கு
இசையை ஒதுக்கிவிடு
உருவகங்களை உயிராக்கு
சிந்தனைகளை நேராக்கு
உபயோகமற்ற பாத்திரங்களை
ஏற்றிவைக்கும் மச்சிருட்டாக
கவிதையை நினைக்காதே''

.நா.சுப்ரமண்யம் நல்ல கவிதையை அடையாளம் கண்டுகொள்ள அழுத்தம் திருத்தமாக வரைவிலக்கணம் கூறுகிறார்:
''பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லாம். மரபுக்கவிதைக்கும், புதுக்கவிதைக்கும் பொதுவான விஷயங்கள்இவை. வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்துஉள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக எந்தக்காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தானிருந்து வந்திருக்கிறது. அந்தந்தக்காலத்துக் கவிதை நல்ல கவிதை. அந்தக்காலத்து சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றைய புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச்சிக்கலையும், புதிரையும் போலவே முதலில் புரியாதது போல இருந்து படிக்க படிக்கப் புரியத்தொடங்குகின்றதா என்பது மூன்றாவது கேள்வி. கடைசியாக கேட்டுக்கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில்விழித்துக்கொள்ளும்போது இந்தக்கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமில்லாது மனசில்தானே தோன்றி
புது அர்த்தம் தருகிறமாதிரி இருக்கிறதா? எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம்..ஆம்...ஆம்...ஆம்...என்று பதிலளிக்க முடிகிறதோ அந்தக்கவிதை நல்ல கவிதை, உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டிவிடலாம். 'புதுக்கவிதை' மட்டும்தான் புதுக்கவிதை என்பதில்லை. பழங்கவிதையும் இன்று வாசித்து அனுபவிக்கும் போது புதுக்கவிதை தான். கவிதைக்கு, எல்லா நல்ல கவிதைக்குமே புதுப்பித்துக்கொள்ளும் சக்தி உண்டென்பது எல்லாமொழி இலக்கியங்களிலுமே நிதர்சனமாக காணக்கிடக்கிற உண்மை.
சிலப்பதிகாரம் அதன் காலத்தில் மட்டுமல்ல இன்றும் புதுக்கவிதைதான். தமிழ் கவிதைக்கு கிழடு தட்டிய பருவமிது என்பதில்யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது. கவிதையரசி மீண்டும்முன்போலத் தமிழில் கொலு வீற்றிருக்க வேண்டும், உயிருள்ளவளாக இருக்கவேண்டும் என்றால் புதுமுயற்சிகள், புதுச்சோதனைகள் நடைபெற்றாக வேண்டும். யாப்பு, எதுகை,மோனை இருப்பதில் தவறில்லை. நல்ல கவிதைக்கு முட்டுக்கட்டை அதில் இல்லை. இன்றைய வாழ்கையின் சிக்கலை பிரதிபலிக்காமல் இன்றைய சூழலின் குழப்பத்தை எடுத்துக்காட்டாமல் பழமையான மனப்பான்மையே புதுக்கவிதை பிறப்பதற்குத் தடையாகவுள்ளது.

"சாதித்திருக்கிறாயா நீ....

என்றது ஒரு கேள்வி

என்னிடம் இப்பொழுது

பதில் இல்லை

என் உடல் மரித்தபின்

எழும் கல்தூண்

முன் கேள்.....!''

'சாதனை' என்கிற தலைப்பில் எஸ்.கே. மதுசூதனன் (ஆத்மாநாம்)

எழுதியதொரு கவிதை இது. மரணத்தின் பின்தான் மகத்துவங்கள்

தெரிய வருகிறது.


''ஐன்ஸ்டீனை ஒரு கனவில் நான் கண்டேன்

ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகப் புல்வெளியில்...

அது வசந்தகாலம்.

மண்டியிட்டு அவரது இளம்கட்டை விரலை

முத்தமிட்டேன்

போப்புக்குச் செய்வது போல.

அவரது இளம் முகம் ரோஜாக்குமிழியிட்டது.

தனியான பிரபஞ்சத்தை

கண்டுபிடித்தேன் நான் --- ஒரு

கன்னியைப் போல....

மெஸ்கலின் அனுபவத்தில் இருந்து......

பேசினேன் நான்.

''ஆம்...அதுவே தன்னைப் பிறப்பித்துக்கொண்டது''

திறந்த வெளியில்

பிரபஞ்சமாய்

வெயிலில் நாங்கள்

மதிய உணவுக்காக உட்கார்ந்தோம்

டென்னிஸ் க்ளப்பில்

பேராசிரியர்களின் மனைவிகள்.

எதிர்பார்த்தது போலவே

எங்கள் சந்திப்பு

முடிவற்று... தொடர்ந்தது

அவர் முஷ்டியை முத்தமிட்ட

என் செயல்

எதிர்பாராமல் புனிதமாயிருந்தது

ஏனெனில்,

அணுகுண்டைப் பற்றி நான்

பேச்செடுக்கவில்லை.''

அணு ஆயுத எதிர்ப்புப்பற்றி வலிமையான குரல் கொடுத்த ஒரேயொரு அமெரிக்க கவிஞர் என்ற வகையில் இலக்கிய உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவர் அலென் கின்ஸ்பேர்க்.
(Allen Ginsberg) அவருடைய புகழ் வாய்ந்த கவிதைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பரிசு (X'mas Gift) என்ற கவிதையின் தமிழாக்கம் மேலுள்ளது.

ஏர்னெஸ்டோ கார்தினல் (Ernesto Cardinal) ஒரு கவி. கத்தோலிக்க பாதிரியார். நிகராகுவாவின் புரட்சியின் வலிமையான ஆதரவாளர். இன்றைய பீதி நிலவும் உலகிலிருந்து தூய்மையும்,
தெளிவான சிந்தனையும் நிறைந்த உலகம் ஒன்றுக்கு இட்டுச் செல்வதற்கான திசை காட்டியாகவும் இருக்கிறார். சர்வாதிகாரி சமோஸாவைக் கவிழ்க்க 1954ம் ஆண்டு நடந்து தோல்வியில் முடிந்த புரட்சியில் பங்கேற்று உயிர் தப்பியவர். நிகாராகுவாவின் விடுதலைப்போராட்டத்தின் தந்தையான அகஸ்டோ சாண்டினோவின் கல்லறை எங்குள்ளதென்று யாருக்கும் தெரியாது. இதைப்போலவே 1954இலும் நடந்தது. அப்போது சர்வாதிகாரியாக இருந்த அனஸ்தாசியோ ஸோமோஸா கார்சியாவை கொல்ல முயன்ற புரட்சியாளர்களில் அடோல்போ பேஸ்போன்(Adolfo Baezbone) என்பவரும் ஒருவர். இனி கவிதையைப் படித்துப்பார்போம்;
''அடோல்போ பேஸ்போனின் நினைவுச்சின்னத்தில் பொறிப்பதற்காக.......''
(An epitaph to the tomb of Adolfo Beazbone) என்பது தலைப்பு.

  • Anand Prasad இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி
    நாளை தொடரும்.....
  • Arasan Elayathamby அலன் கின்ஸ்பெர்க் கவிதைகளை யார் இப்பல்லாம் படிகின்றார்கள் ,,துணுக்கு துணுக்கா நெடுந்தீவு முகிலன் போர்ந்றவர் எழுதும் கவிதைகள் தான் எல்லாரும் படிகின்றார்களே!
  • Vanitha Devasigamony ''பெரியதோட்டத்திலே
    ஒரேயொரு பூ தான் பூத்திருக்கிறது!
    ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகள்
    அந்த ஒரு பூவைக் கண்டு கொள்கின்றன.
    தேடிக்காண்பதே கவிதை.....
    தேடாமல் காண இயலாது.''
  • Gowry Sivapalan கவிதை காதிலே நுழைந்து கருத்திலே இடம்பிடிக்க வேண்டும். எழுதும் எழுத்து பிறர் பயன் கருதியதாக இருக்க வேண்டும். உண்மையே . மரம் பற்றிய வைரமுத்து கவிதை ஒரு முறை படித்தேன் . ஆனால் இன்னும் ஒவ்வொரு வரிகளும் உள்ளத்துள் நிறைந்துள்ளன. நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டு நடுவில் நல்மரம் என்று பாடிய அவ்வையாரை இடித்துரைத்தார். இவ்வாறு கவிதை கருத்தை கவர வேண்டும் . நல்ல நிறைவான கட்டுரை தந்துள்ளீர்கள் . தொடருங்கள்
  • Thiru Thirukkumaran கவிதை எழுத வாழ்வின் ஊடே ஓடும் தர்க்கத்தின் இழையை உணரும் திறன் வேண்டும், அதன் விளைவு தார்மீக உணர்வாகி வீரியத்தின் உலையில் உருகிப் பிழம்பின் நிலையை எய்தி பின் எழுத்தில் வர வேண்டும் - பிரமிள்
  • Arasan Elayathamby ஒருவரின் கவிதை அனுபவம் எல்லாருக்கும் பொதுவாக அமையாது ! தமிழ்நாடையே கலக்கிய இரா முருகனின் "ஒரு கிராமத்து பெண்ணின் தலைப் பிரசவம்" கவிதைய பலர் குப்பை எண்டும் சொனார்களே !
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அழகாகச் சொல்லியிருக்கிறார் "..நள்ளிரவில்விழித்துக்கொள்ளும்போது இந்தக்கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமில்லாது மனசில்தானே தோன்றி
    புது அர்த்தம் தருகிறமாதிரி இருக்கிறதா..." ஆம் அதுதான் கவிதை.