மழைக் கை பிடித்து சில
அடிகள் நடந்தேன் - வந்த
மலைப்பால் நடை குளிர்ந்தேன்!
கழையைத் துணையாய் எந்தன்
கக்கத்துள் வைத்தேன் அந்தக்
களையால் உடல் தளர்ந்தேன்.
விழையும் திறன் மீண்டும்வர
விசையுந்திப்போய் நொந்து
வலியாலறிவழிந்தேன்.
நுழையும் வழி தெரிந்தும்....நூல்
நுழையாத ஊசியின் கண்
பிழையாலழிந்தொழிந்தேன்.
கனவாகி இவையாவும்
கழிந்தோடிப்போயின - பின்
கனடாவில் கால்பதித்தேன் - வெறும்
நினைவாக இவையாவும்
நின்றுவிட.....நீள்கனவின்
நினைவுகளை நான்மதித்தேன்.
அனல்வாதம் புனல்வாதம்
அடிபட்டுப்போனாலும்
அகதியாய்ப் பரிணமித்தேன்
இனவாதம் பிடிவாதம்
இவையெல்லாம் போய் இளகி
இதமாகிப் பரிமளித்தேன்.
வயதொன்று போகும்! ஒரு
வருடம் கடந்தால்...... அது
வரலாறு..... என ஏகுமே!
நயமோடு நஷ்டமும்
நன்மைதான்.....என்றால் - சில
நிம்மதிகள் வரவாகுமே.
பயனொன்று வாழ்வினில்
பயந்ததென்றால்..........சொந்த
பந்தங்கள் உறவாடுமே
சுயலாபத்திரையில்........சில
சித்திரம் தீட்ட - உற(வு)
உறவாமல் மனம் வாடுமே.
உன்மத்தம்..... என் மத்துள்
உழன்றுழன்று கடைந்ததில்
உயிர் தயிரில் நெய்யானது......இனி
ஐன்மத்தில் உயிர்கொல்லும்
எண்ணம் வலுவிழந்தென்
ஏகாந்தம் மெய்யானது
வன்முறையால் தீர்வுகளே
வாராதென்றோரறிவு
வந்ததுகாண்.......பொய்யானது
என்வரையில்.....தோற்றுவிடும்!
ஏதமிலாதென்னுள்ளில்
எழுநம்பிக்கையானது.
கண்கெட்ட பின்பு.......வரும்
கதிரவனைக் கண்டுவிட
கனகாலம் வீண்டித்தேன்!
பண்கட்டிப் பாட்டெழுதும்
பயனிலதோர் பாவலனாய்
பலகாலம் பாழடித்தேன்
வெண்கட்டியோடொருகால்
வேள்விகளைக்கரும்பலகை
வேர்க்கக் கதையளந்தேன்
என்கட்டிலிதுதான்!....... இதை
இனிமூடு.......! ஆணியடி!!!
என்றுநான் கண்வளர்வேன்!!!
ஆனந்தபிரசாத்.
